Published : 25 Aug 2020 06:57 AM
Last Updated : 25 Aug 2020 06:57 AM

தீவிரவாதியாக மாறுவான் என நினைத்து பார்க்கவில்லை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த மகனின் தந்தை அதிர்ச்சி

‘‘என் மகன் யாருடனும் சண்டை போட்டதில்லை. அவன் தீவிரவாதியாக மாறுவான் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை’’ என்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞரின் தந்தை அதிர்ச்சியாக கூறுகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூரியில் உள்ள பதியா பைசாகி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகமது முஸ்தகீம் கான் என்கிற அபு யூசுப் கான். இவரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

அபு யூசுப் கான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். மேலும், டெல்லியில் கைது செய்ய போலீஸார் சென்ற போது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். போலீஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தி, அபு யூசுப் கானை கைது செய்தனர். டெல்லியில் தனியாளாக தாக்குதல் நடத்த கான் திட்டமிட்டிருந்தததாக போலீஸார் தெரிவித்தனர்.

மகனை கைது செய்ததால், அவரது தந்தை கபீல் அகமது அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் செய்தி சேனலுக்கு கபீல் அகமது அளித்த பேட்டியில், ‘‘ எனது மகன் மிகவும் நல்லவன். தீவிரவாதப் பாதையைத் தேர்ந்தெடுப்பான் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அவன் யாருடனும் சண்டை போட்டதில்லை. அக்கம் பக்கத்தினர் எல்லோருக்கும் அவனைப் பற்றி தெரியும். மேலும், வெடிபொருட்களை கான் வீட்டில் சேகரித்து வைத்துள்ளார். இது எனக்கு தெரிந்திருந்தால், கண்டிப்பாக என் மகனை வீட்டில் சேர்த்திருக்க மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.

அபு யூசுப் கானின் மனைவி ஆயிஷா கூறும்போது, ‘‘தவறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று நான் அடிக்கடி கூறினேன். ஆனால், எனது கணவர் கேட்கவில்லை’’ என்று கண்ணீருடன் கூறினார்.

அபு யூசுப் கான் தீவிரவாதியாக இருந்ததை அறிந்து கிராமத்தில் உள்ளவர்களும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை கிராமத்துக்கு வந்த போலீஸார் கான் வீட்டில் சோதனையிட்டு வெடிபொருட்களை கைப்பற்றினர். அவர்கள் சென்ற பிறகு, கிராம மக்கள் கூட்டமாக வந்து கான் தந்தை கபீல் அகமதுவுக்கும் மனைவி ஆயிஷாவுக்கும் ஆறுதல் கூறினர்.

அபு யூசுப் கான் 2 முறை வளைகுடா நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். மும்பையிலும் சில காலம் வேலை செய்துள்ளார். அவரது தந்தை கபீல் அகமது விவசாயி. அவருக்கு 4 மகன்கள். கானின் தம்பிகள் 2 பேர் சவுதி அரேபியாவில் கார் ஓட்டுநர்களாக வேலை செய்கின்றனர். இன்னொரு சகோதரர் கிராமத்தில் வசிக்கிறார் என்று கிராமத் தலைவர் முஸ்தபா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x