Published : 24 Aug 2020 05:28 PM
Last Updated : 24 Aug 2020 05:28 PM

ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசம் 3-வது முறையாக நீட்டிப்பு: மத்திய அரசு புதிய அறிவிப்பு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகன ஆணங்களை புதுப்பிக்கும் காலஅவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் அதை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மார்ச் 30ம் தேதியும், பின்னர் ஜூன் 9-ம் தேதியும் நீட்டிக்கப்பட்டது, இப்போது 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

வாகனங்களுக்கான தகுதிச்சான்று(எப்சி), அனைத்துவிதமான பெர்மிட், ஓட்டுநர் உரிமம், பதிவு செய்தல், உள்ளிட்ட மோட்டார் வாகனச்சட்டம் 1998, 1989-ல் விதியின் ன் கீழ்வரும் ஆவணங்கள் அனைத்தும் புதுப்பிக்கும் தேதி 2020, டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கு முன் செப்டம்பர் 30-ம் தேதிவரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தது, அது நீட்டிக்கப்படுகிறது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டில் இருக்கும் சூழலைக் கருத்தில் கொண்டும், மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் சூழல் காரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து காலாவதியாக இருந்தால், அதன் காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

ஆதலால் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கூறப்பட்ட ஆவணங்களை டிசம்பர் 31-ம் தேதிவரை செல்லுபடியாகும் என்பதை செயல்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x