Published : 24 Aug 2020 03:11 PM
Last Updated : 24 Aug 2020 03:11 PM

காங்கிரஸ் பள்ளியில் தலைமையாசிரியரின் குழந்தைகள் தானே முதலிடம் பெற முடியும்?- பாஜக கிண்டல்

நரோத்தம் மிஸ்ரா

புதுடெல்லி

காங்கிரஸ் பள்ளியில் தலைமையாசிரியரின் குழந்தைகள் தானே முதலிடம் பெற முடியும் என மத்திய பிரதேச அமைச்சரும் அம்மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான நரோத்தம் மிஸ்ரா கிண்டலாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியைக் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தபின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து தற்போதுவரை ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

இது தொடர்பாக சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் 24 பேர் கடிதம் எழுதி தலைமை குறித்து உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தியுள்ளனர். குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, சசி தரூர், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி தேவை, முழுநேரத் தலைமை அவசியம் எனக் கோருகின்றனர்.

இந்நிலையில் தலைமை குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காணொலி மூலம் கூடியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தான் இடைக்காலத் தலைவர் பதிவியிலிருந்து விலகுவதாக விருப்பம் தெரிவித்து பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு விளக்கமாகப் பதில் அளித்து கடிதம் அளித்துள்ளார் என்றும், புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்குங்கள், தன்னைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சோனியா காந்தியே தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் சோனியா காந்திக்கு எதிராகக் கடிதம் எழுதிய தலைவர்களை மன்மோகன் சிங்கும், மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனியும் கடுமையாக விமர்சித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய ராகுல் காந்தி, சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது அவருக்கு மூத்த தலைவர்கள் ஏன் கடிதம் அனுப்பினார்கள் என்றும், மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியின் இந்த திடீர் குற்றச்சாட்டால் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா என அடுக்கடுக்காக ராகுல் காந்திக்கு ட்விட்டரில் கபில் சிபல் கேள்வி எழுப்பினார். பின்னர் ராகுல் காந்தி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து கபில் சிபல் தனது ட்வீட்டுகளை திரும்பப் பெற்றுக் கொண்டார். காங்கிரஸில் எழுந்துள்ள இந்த மோதல் குறித்து பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பிரதேச அமைச்சரும் அம்மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:
‘‘காங்கிரஸ் கட்சியில் தலைமை பதவிக்கு பல தகுதியான தலைவர்கள் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவரது குழந்தைகள் ரேகன் வத்ரா, மிராயா வத்ரா என பல தகுதியான தலைவர்கள் உள்ளனர். தலைமையாசிரியரின் குழந்தைகள் தான் முதலிடம் பெற வேண்டும், அப்படிபட்ட ஒரு பள்ளி தான் அவர்களுக்கு தேவை. இதுபோன்ற பள்ளி போல காங்கிரஸ் உருவாவதை அக்கட்சியின் தலைமை விரும்புகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x