Last Updated : 24 Aug, 2020 11:49 AM

 

Published : 24 Aug 2020 11:49 AM
Last Updated : 24 Aug 2020 11:49 AM

இந்தியாவில் கரோனாவிலிருந்து மீண்டோர் 75 சதவீதமாக உயர்வு: தொற்று 31 லட்சத்தைக் கடந்தது

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 75 சதவீதத்தைக் கடந்துள்ளது. அதேசமயம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவல்:

''கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 61 ஆயிரத்து 408 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 31 லட்சத்து 6 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 7-ம் தேதி 20 லட்சமாக எட்டிய நிலையில், அடுத்த 17 நாட்களில் 11 லட்சத்தை எட்டியுள்ளது கரோனா தொற்று.

ஆனால், இதில் ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 75 சதவீதத்துக்கும் மேலாக 75.27 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 23 லட்சத்து 38 ஆயிரத்து 35 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்பில் 22.88 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 836 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்தப் பாதிப்பு 57 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.85 ஆகச் சரிந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 258 பேர் உயிரிழந்தனர். அடுத்ததாக தமிழகத்தில் 97 பேர், ஆந்திராவில் 93 பேர், கர்நாடகாவில் 63 பேர், உத்தரப் பிரதேசத்தில் 59 பேர், மேற்கு வங்கத்தில் 57 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப்பில் 50 பேர், மத்தியப் பிரதேசத்தில் 23 பேர், டெல்லியில் 16 பேர், குஜராத்தில் 14 பேர், ராஜஸ்தானில் 11 பேர், ஒடிசாவில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் 9 பேர், அசாம், பிஹார், சத்தீஸ்கர், புதுச்சேரியில் தலா 8 பேர், ஹரியாணா, தெலங்கானாவில் தலா 6 பேர், கேரளா, உத்தரகாண்டில் தலா 5 பேர், சண்டிகர், ஜார்க்கண்ட், கோவாவில் தலா 4 பேர், லடாக்கில் 2 பேர், அந்தமான் நிகோபர், மேகாலயா, திரிபுராவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி இதுவரை 3 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 137 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 6 லட்சத்து 9 ஆயிரத்து 917 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 258 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்தப் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 859 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 97 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6,517 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 11 ஆயிரத்து 778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,300 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14 ஆயிரத்து 517 பேர் சிகிச்சையில் உள்ளனர். 14 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,895 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 83,567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 68 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 4,683 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 20,394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் 89 ஆயிரத்து 742 பேர் சிகிச்சையில் உள்ளனர். 93 பேர் நேற்று பலியானதையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,282 ஆக அதிரித்துள்ளது.

தெலங்கானாவில் 22 ஆயிரத்து 919 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு நேற்று மட்டும் 6 பேர் பலியானதையடுத்து, உயிரிழப்பு 761 ஆக அதிகரித்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x