Last Updated : 22 Aug, 2020 11:46 AM

 

Published : 22 Aug 2020 11:46 AM
Last Updated : 22 Aug 2020 11:46 AM

கரோனாவிலிருந்து 22 லட்சம் பேர் குணமடைந்தனர்: தொற்று 30 லட்சத்தை நெருங்குகிறது; ஒரே நாளில் 10 லட்சம் பரிசோதனை செய்து மைல்கல் 

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம், தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்குகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 69 ஆயிரத்து 874 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 29 லட்சத்து 75 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டிய நிலையில், நாளையுடன் 16 நாட்களில் அடுத்த 10 லட்சத்தை எட்ட உள்ளது.

இதில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 22 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோர் வீதம் 74.69 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாட்டில் கரோனாவுக்காக 6 லட்சத்து 97 ஆயிரத்து 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வருவோர் 23.43 சதவீதமாக இருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 945 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு 55 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.87 சதவீதமாகக் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 339 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 101 பேரும், கர்நாடகாவில் 93 பேரும், ஆந்திராவில் 91 பேரும் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் 64 பேர், மேற்கு வங்கத்தில் 55 பேர், பஞ்சாப்பில் 34 பேர், ஜம்மு காஷ்மீரில் 15 பேர், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் தலா 14 பேர், டெல்லியில் 13 பேர், கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தானில் தலா 12 பேர், ஜார்க்கண்டில் 11 பேர் கரோனாவில் உயிரிழந்தனர்.

ஒடிசாவில் 10 பேர், கோவாவில் 9 பேர், ஹரியாணா, தெலங்கானாவில் தலா 7 பேர், அசாம், பிஹார், புதுச்சேரியில் தலா 6 பேர், உத்தரகாண்டில் 5 பேர், சண்டிகரில் 2 பேர், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், அந்தமான் நிகோபர், லடாக், திரிபுராவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10 லட்சத்து 23 ஆயிரத்து 836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

இதுவரை 10 லட்சம் மாதிரிகள் ஒரேநாளில் பரிசோதிக்கப்படவில்லை. இதை இலக்காக வைத்துதான் ஐசிஎம்ஆர் செயல்பட்டு வந்தது. ஒட்டுமொத்தமாக 3 கோடியே 44 லட்சத்து 91 ஆயிர்தது 73 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 339 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 698 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 879 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 101 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 11 ஆயிரத்து 426 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,270 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14 ஆயிரத்து 177 பேர் சிகிச்சையில் உள்ளனர். 14 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 83,082 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 93 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 4,522 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 18,736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x