Published : 25 Sep 2015 09:38 AM
Last Updated : 25 Sep 2015 09:38 AM

மங்கள்யான் ஓராண்டு வெற்றி விழா: பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்ணில் செலுத்த‌ப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி மங்கள்யான் விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.

சுமார் 10 மாதங்கள் நீண்ட பயணம் மேற்கொண்ட மங்கள் யான் விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. இதையடுத்து மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கேமரா, ஆய்வு கருவிகள் அதன் ஆய்வு பணியை தொடங்கின. இந்த ஆய்வுப் பணிகள் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் விஞ்ஞானிகள் நேற்று வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் கிரண்குமார், மங்கள் யான் திட்ட இயக்குநர் அருணன், மங்கள்யான் விண்கல உருவாக் கத்தில் முக்கிய பங்கு வகித்த மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். அப்போது மங்கள் யான் விண்கலம் எடுத்து அனுப்பிய வண்ண புகைப்படங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் செவ்வாய் கிரகத்தில் உள்ள மீத்தேன் சென்சாரின் மூலம் தெரியவந்த‌ ஆராய்ச்சி முடிவுகளை கொண்ட கட்டுரைகளையும் வெளியிட்டனர்.

இதையடுத்து வருகிற அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள, 'தி மார்டெய்ன்' என்கிற ஹாலிவுட் திரைப்படம் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் சார்பில் திரையிடப்பட்டது. விண்வெளி ஆய்வுத்துறை தொடர்பான இந்தப் படத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டு களித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேசு கையில், “6 மாதங்கள் மட்டுமே செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட மங்கள்யான், கடந்த ஓராண்டாக எவ்வித பழுதும் இல்லாமல் செயல்பட்டுள்ளது. இன்னும் 35 கிலோ எரி பொருள் இருப்பதால் மங்கள்யான் மேலும் சில காலம் செயல்படும் திறனும் பெற்றுள்ளது. மங்கள்யானின் வெற்றியால் வ‌ளர்ந்த நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியுள்ளது. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x