Last Updated : 19 Aug, 2020 01:11 PM

 

Published : 19 Aug 2020 01:11 PM
Last Updated : 19 Aug 2020 01:11 PM

2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் கிடக்கிறது: ராகுல் காந்தி விமர்சனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வேலையின்மை குறித்த உண்மையை இந்த தேசத்திலிருந்து இனிமேலும் மறைக்க முடியாது என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு அறிக்கையில், “லாக்-டவுன் காரணமாக ஏப்ரல்-ஜூலையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் பணியிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12 கோடியே 15 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதில், சிறு வணிகர்கள், தினக்கூலிகள், தெருவில் கூவி விற்பவர்களில் 9 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது “ எனத் தெரிவித்திருந்தது.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து நாளேடுகளில் வந்த செய்தியை தனது ட்விட்டர் பதிவில் இணைத்து ராகுல் காந்தி இந்தியில் கருத்துப் பதிவிட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அதில் “ கடந்த 4 மாதங்களில் மட்டும் ஏறக்குறைய 2 கோடி மக்கள் நாட்டில் வேலையிழந்துள்ளார்கள் என ஊடங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் கிடக்கிறது.

வேலையின்மை மற்றும் பொருளாதாரத்தை சிதைக்கும் உண்மைகளை பொய்யான செய்திகள், ஃபேஸ்புக்கில் வெறுப்புச் செய்திகளைப் பரப்பி தேசத்திலிருந்து மறைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு கடந்த 14-ம் தேதி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் நிர்வாகம் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர் பேசும் வெறுப்புப் பேச்சுகளை வேண்டுமென்றே தடை செய்வதில்லை, கண்டுகொள்வதில்லை. இதற்கு இந்திய ஃபேஸ்புக் நிர்வாகத்தில் இருக்கும் அன்கி தாஸ் பின்னணியில் இருக்கிறார் என்று தெரிவித்தது.

இந்த செய்தியைத் தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் கட்சி, பாஜக தலைவர்கள் தீவிர கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் காந்தி நேற்று பதிவிட்ட ட்விட்டர் கருத்தில் “ பாரபட்சம், பொய் செய்தி, வெறுப்புப் பேச்சு ஆகியவை மூலம் கடினமான முயற்சியின் மூலம் பெற்ற ஜனநாயகத்தை மாற்ற முயல்வதை நாம்அனுமதிக்க முடியாது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியான, ஃபேஸ்புக் நிறுவனம் வெறுப்புச் செய்தி பரப்புவதில் பாரபட்சமாக நடப்பது குறித்து இந்தியர்கள் அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத், பதிலடி கொடுத்திருந்தார். அவர் அளித்த பதிலில் “சிலரின் அரசியல் தளம் சுருங்கிவிட்டநிலையில், இதுபோன்ற தளங்களில் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறார்கள். சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் கருத்துக்களைக் கூற உரிமை உண்டு” என்று வலியுறுத்தினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x