Published : 19 Aug 2020 08:08 AM
Last Updated : 19 Aug 2020 08:08 AM

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தெலங்கானா அரசு மெத்தனமாக செயல்படுகிறது: ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றச்சாட்டு

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தெலங்கானா அரசு மெத்தனமாக செயல்படுவதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசைசவுந்தர்ராஜன் தொடக்கத்தில் இருந்தே கரோனா பரவல் குறித்துமாநில மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும், சுகாதார அமைச்சர், அதிகாரிகள், மருத்துவர்களிடம் கரோனா பரவல் நிலவரம் குறித்துஅவ்வப்போது கேட்டறிந்து வருகிறார். இதுதவிர, கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் சமீபத்தில் எடுத்துரைத்தார்.

இந்நிலையில், கரோனா பரவல் வேகமாக அதிகரித்தாலும் சோதனைகள் ஆமை வேகத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

இந்நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தேசிய ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பே்ட்டியில் கூறியதாவது:

கரோனாவை கட்டுப்படுத்துவதில் டிஆர்எஸ் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. இதுகுறித்து அரசுக்கு 5, 6 முறை கடிதம் எழுதியும் எந்தப் பலனும் இல்லை. கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனைகள் அதிகரித்தால்தான் இந்த தொற்றை நாம் முற்றிலுமாக ஒழிக்க முடியும். ஆனால், ஐசிஎம்ஆர் நிபந்தனைகளின்படிதான் நாங்கள் கரோனா பரிசோதனை செய்கிறோம் எனஅரசு கூறுகிறது. கண்டோன்மெண்ட் பகுதிகளில் கூட அரசு அலட்சியமாக நடந்து கொள்கிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால்தான் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது என்பது தெலங்கானா அரசுக்கு சுமையாக மாறிவிட்டதோ என தோன்றுகிறது. முதல்வர் கே. சந்திரசேகர ராவிடம் இதுகுறித்து பேசும்போது சற்று காட்டமாகவே கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆளுநரின் இந்த பேட்டி ஆளுநருக்கும், தெலங்கானா அரசுக்கும்இடையே நிலவும் ஒருவித பனிப்போரை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.

ஆந்திர மாநிலத்தில்..

ஆந்திராவிலும் கரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9,652 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பரவியுள்ளதாக மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை அறிவித்துள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 6,261 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 18,311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 85,130 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி 88 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதுவரை ஆந்திராவில் மொத்தம் 29 லட்சத்து 61,611 பேருக்குகரோனா பரிசோதனை நடந்துள்ளதாக மருத்துவத் துறை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல, கடந்த 24 மணி நேரத்தில்9,211 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x