Published : 19 Aug 2020 07:02 AM
Last Updated : 19 Aug 2020 07:02 AM
சுதந்திர தின விழாவன்று பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகை ஒரு விவசாயி பரிசாக அளித்தது என்பது தெரிய வந்துள்ளது.
சுதந்திர தின விழாக்களின் போது பிரதமர் மோடி பாரம்பரிய தலைப்பாகை அணிந்து, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம் போல பிரதமர் மோடி காவி மற்றும் க்ரீம் வண்ணத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார். அந்த தலைப்பாகை குஜராத் மாநிலம் தாபி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜன்சிங் பார்மர் (38) என்ற விவசாயி பிரதமருக்கு பரிசாக அளித்தது என்று மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுஜன்சிங் பார்மர் கூறியதாவது: பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 2 முறை அவரை சந்தித்துள்ளேன். அப்போது அவரிடம் நான் கட்டிய தலைப்பாகைகளை பரிசாக அளித்துள்ளேன். ஆனால், அப்போது அவர் அதை அணிந்து கொள்ளவில்லை. இந்த சுதந்திர தின விழாவுக்கு முன் மாநில பாஜக தலைவர் பாட்டீல் என்னைத் தொடர்பு கொண்டு பிரதமர் அணிவதற்காக தலைப்பாகைகள் தயார் செய்யும்படி கூறினார். நான் 6 தலைப்பாகைகளை தயார் செய்து பரிசாகக் கொடுத்தேன். அதைத்தான் சுதந்திர தின விழாவில் பிரதமர் அணிந்து கொண்டார். அதன் மூலம் எனது ஆசை நிறைவேறியுள்ளது.
இவ்வாறு சுஜன்சிங் பார்மர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT