Published : 19 Aug 2020 06:46 AM
Last Updated : 19 Aug 2020 06:46 AM

இறுதியாண்டு தேர்வை தள்ளி வைக்கலாம்; முழுமையாக ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு வாதம்

‘‘இறுதியாண்டு தேர்வுகளை தள்ளி வைக்கலாம், தாமதப்படுத்தலாம்; ஆனால் ரத்து செய்ய முடியாது’’ என்று உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தேர்வு நடத்த வேண்டும் என்ற யுஜிசி உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது யுஜிசி தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “இறுதியாண்டு தேர்வுகளை தள்ளி வைக்கலாம், தாமதப்படுத்தலாம்; ஆனால் ரத்து செய்ய முடியாது. பட்டம் என்பது சட்டரீதியிலான ஆணை என்பதால் தேர்வுகள் இல்லாமல் அதனை வழங்க முடியாது. செப்டம்பர் 30 கால வரம்பை தள்ளி வைக்குமாறு பல்கலைக்கழகங்கள் கோரலாம். ஆனால் தேர்வை ரத்து செய்யும் முடிவை எடுக்க முடியாது. பேரிடர் மேலாண்மை சட்டப்படி முடிவு எடுக்கும் அதிகாரத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் செயல்படுகிறது. மாணவர்கள் 21 - 22 வயது கொண்டவர்கள். அவர்கள் வெளியே செல்ல மாட்டார்கள் என்பதை உங்களால் உண்மையில் நம்ப முடிகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து இந்த வழக்கில் இனிமேலும் வாதங்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்கள் மீதான எழுத்துபூர்வ அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x