Published : 18 Aug 2020 10:50 PM
Last Updated : 18 Aug 2020 10:50 PM

கரோனா தொற்று: இந்தியாவில் ஒரே நாளில் 9 லட்சம் பரிசோதனைகள்

இந்தியா ஒரே நாளில் ஒன்பது லட்சம் பரிசோதனைகளை செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரே நாளில் 57,584 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களைவிட 13 லட்சம் பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர்.

இந்தியா, கோவிட்-19 பரிசோதனையில் மற்றுமொரு சாதனை படைத்துள்ளது. ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவில் கிட்டதட்ட ஒன்பது லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,09,41,264 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது (8.81 விழுக்காடு). இது வாரந்திர தேசிய சராசரியை(8.84) விட குறைவுதான்.

கடந்த ஒரே நாளில் அதிகபட்சமாக 57,584 பேர் குணமடைந்துள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். தீவிர பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் மற்றும் தரமான மருத்துவச் சிகிச்சைகள் ஆகியவற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளது (19,77,779). மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவர்களைவிட தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்துக்கும் அதிகமாகியுள்ளது (13,04,613).

இந்தியாவில் நாள்தோறும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73.18 சதவீதம் அதிகரித்துள்ள அதே சமயத்தில், உயிரிழப்பு 1.92 சதவீதமாகக் குறைந்துள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசின் ஒருங்கிணைப்புடன் கவனமாக செயல்பட்டதால் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது.

மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 6,73,166 மட்டுமே. இது, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 24.91 விழுக்காடுதான். இந்தக் குறைவான எண்ணிக்கை நோய்த் தொற்றுக் குறைவதைக் காட்டுகிறது.

இந்தியாவில் மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஆய்வகங்கள் 971, தனியார் ஆய்வகங்கள் 505 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1476 ஆக உயர்ந்துள்ளது. இதன் விவரங்கள்:

ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்: 755 (அரசு: 450 + தனியார்: 305)
ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 604 (அரசு: 487 + தனியார்: 117)
சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 117 (அரசு: 34 + தனியார்: 83)

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x