உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்

‘பிஎம் கேர்ஸ்’ அறக்கட்டளை நிதியை தேசிய பேரிடர் மேம்பாட்டு நிதிக்கு மாற்றக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Published on

கரோனா வைரஸ் பெருந்தொற்றைச் சமாளிக்கும் நோக்கில் மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

கரோனா வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல. எனவே, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி ஆர்டிஐ விண்ணப்பதாரர் ஸ்ரீ ஹர்ஷா கந்துகுரி என்பவர் கேட்டிருந்த விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

அதில், “பிஎம் கேர்ஸ் நிதியம் தகவல் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 2 ஹெச்-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் வராது. இது தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டு விவரங்களை அளிக்க மறுத்திருந்தது.

இந்நிலையில் சிபிசிஎல் எனும் தனியார் தொண்டு நிறுவனம் பிஎம் கேர்ஸ் நிதி அனைத்தையும் தேசிய பேரிடர் நிதிக்குக் கொண்டு வரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு அசோக் பூஷண் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஏற்கெனவே இந்த மனுவில் பதில் அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன் ஆகியோர் வாதி்ட்டனர்.

மத்திய அரசு இந்த வழக்கில் வாதிடுகையில் “பிஎம் கேர்ஸ் நிதி என்பது பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை. யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யலாம். ஆனால், பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு சட்டரீதியாக மாற்றலாம் என்பது தவறான கருத்து.

பிஎம் கேர்ஸ் நிதி என்பது தாமாக முன்வந்து நன்கொடை வழங்குவோரிடம் இருந்து பெறும் அறக்கட்டளையாகும். தேசிய பேரிடர் நிதி, மாநிலப் பேரிடர் நிதிக்கு வழக்கம்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிடுகையில், “பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களைப் பற்றி சந்தேகப்படவில்லை. ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பிஎம் கேர்ஸ் நிதி இருக்கிறது.

தேசிய பேரிடர் நிதி அமைப்பு மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரியால் தணிக்கை செய்யப்படுகிறது. அதேபோன்று பிஎம் கேர்ஸ் நிதியும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில் “ கார்ப்பரேட் நிறுவனங்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு பிரதான பங்களிப்பாளர்களாக இருக்கிறார்கள். இந்த அறக்கட்டளைக்கு அவர்கள் பங்களிப்பு செய்தால், கார்ப்பரேட் சமூக பொறுப்பின் பலன்களைபெறுகிறார்கள். ஆனால், மாநிலங்களுக்கு இந்த பலன் கிடைப்பதில்லை” எனத் தெரிவித்தார்.

பேரிடர் மற்றும் பெருந்தொற்று நோயைச் சமாளிக்க தனியாக தேசிய அளவிலான திட்டம் தேவை என்ற வாதத்தைக் கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 27-ம் தேதி எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in