Published : 17 Aug 2020 06:54 AM
Last Updated : 17 Aug 2020 06:54 AM

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சீன நாட்டைச் சேர்ந்தவர் கைது

டெல்லியில் வசித்து வந்த சீன நாட்டைச் சேர்ந்த லூயோ சாங் வருமான வரித் துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவர் சார்லி பெங் என்ற போலி பெயரில் டெல்லியில் இயங்கி வந்தார். திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக திபெத் துறவிகளுக்கு இவர் லஞ்சம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் மஜ்னு கா திலா அருகே வசிக்கும் திபெத் மதத் துறவிகள் பலருக்கு இவர் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை லஞ்சமாக வழங்கியுள்ளார். கடந்த 2018-ல் இவர் மீது டெல்லி போலீஸார் வேறொரு வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வழக்கில் அவர் ஜாமீனில் உள்ளார்.

மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில் இவர் 2014-ம் ஆண்டில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மிசோரமைச் சேர்ந்த ஒரு பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டு இந்திய அடையாளத்தைப் பெற்றுள்ளார். மேலும் மணிப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட்டையும் இவர் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லூயோ சாங்கின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மூலமாக திபெத் துறவிகளுக்கு இவர் சட்டவிரோதப் பணப் பரிவரித்தனை செய்தது தெரிய வந்துள்ளது. இவரிடம் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர் தற்போது விசாரணையில் உள்ளார். 40-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை இவர் இயக்கி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.300 கோடிக்கு சட்ட விரோத பரிவர்த்தனை நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன நிறுவனங்கள் சார்பாக பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன, அவற்றில் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x