Published : 16 Aug 2020 09:34 PM
Last Updated : 16 Aug 2020 09:34 PM

சேட்டன் சவுகான் மரணம்; பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்

புதுடெல்லி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சவுகான் இன்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகான். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியில், கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார்.

ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பாஜகவில் இணைந்தார்.

உத்தர பிரதேசத்தில் தற்போது மாநில அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். 73 வயதாகும் சேட்டன் சவுகானுக்கு கடந்த ஜூலை 12-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடந்த ஒரு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. இதனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து அவர் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நேற்று தெரிவித்தது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானர். அவரது மறைவுக்கு பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சேட்டன் சவுகான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘‘சேட்டன் சவுகான், அற்புதமான கிரிக்கெட் வீரராகவும், விடாமுயற்சியுள்ள அரசியல் தலைவராகவும் தன்னை வேறுபடுத்தி கொண்டார். உ.பி.யில் பாஜகவை வலுப்படுத்துவதிலும், மக்கள் சேவையாற்றுவதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி வந்தார். அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ’’ எனக் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்‌ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் ‘‘ சேட்டன் சவுகான் தனது ஒரு விளையாட்டு வீரராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றினார். அவரது மரணம் இந்திய அரசியலுக்கும் கிரிக்கெட்டுக்கும் பெரும் இழப்பு.’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் சேட்டன் சவுகான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x