கரோனா  தொற்று; முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சவுகான் மரணம்

கரோனா  தொற்று; முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சவுகான் மரணம்
Updated on
1 min read

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சவுகான் இன்று காலமானார். அவருக்கு வயது 73.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகான். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியில், கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ளார்.

ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பாஜகவில் இணைந்தார்.

உத்தர பிரதேசத்தில் தற்போது மாநில அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். 73 வயதாகும் சேட்டன் சவுகானுக்கு கடந்த ஜூலை 12-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடந்த ஒரு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாகவும் இதனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து அவர் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ளதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நேற்று தெரிவித்தது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானர். அவரது மறைவுக்கு பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in