

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த தெலங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு ஆந்திராவில் நேற்று சிலை நிறுவப்பட்டது.
இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கிடையே லடாக் பகுதியில் கடந்த ஜூன் மாதம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் தெலங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கியதுடன், ஹைதராபாத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு உதவி ஆட்சியர் பணிக்கான நியமன பத்திரத்தையும் வழங்கினார். தற்போது சந்தோஷ் பாபுவின் மனைவியான சந்தோஷி ஹைதராபாத்தில் உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சந்தோஷ்பாபுவின் உயிர்த் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் டங்கடூரு அருகே உள்ள கைகரம் எனும் பகுதியில் நேற்று அவருக்கு சிலை நிறுவப்பட்டது.
ஆர்ய வைஸ்ய சங்கத்தினர் சார்பில் நேற்று சந்தோஷ்பாபுவிற்கு சிலை வைக்கப்பட்டது. இதில் பலர் பங்கேற்று இவரின் சிலை அருகே தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழாவினை கொண்டாடினர்.