Published : 16 Aug 2020 06:48 AM
Last Updated : 16 Aug 2020 06:48 AM

தங்கக் கடத்தலில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட3 பேரிடம் அமலாக்கத் துறை விசாரணை

கேரள மாநில திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி, 30 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றி வந்த பி.எஸ்.சரித், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சிலர் தூதரக சலுகையை முறைகேடாக பயன்படுத்தி தங்கக் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கை சுங்கத் துறை,அமலாக்கத் துறை மட்டுமின்றி, தீவிரவாத தொடர்பு சந்தேகத்தின் பேரில், என்ஐஏ.வும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 16 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. இந்நிலையில் டி.எம்.முகமது அன்வர், ஹம்சத் அப்துல் சலாம், டி.எம்.சம்ஜு, ஹம்ஜத் அலி ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த நால்வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கத்தை கொள்முதல் செய்ய பணம் கொடுத்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற என்ஐஏ குழு, முக்கிய குற்றவாளி பைசல் பரீதைதங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இதனிடையே பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று முன்தினம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த எம்.சிவசங்கரன் மீது என்ஐஏ குற்றம் சாட்டியிருந்தது. கடத்தல் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அந்தப் பதவியில் இருந்து சிவசங்கரன் நீக்கப்பட்டார். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் இருவரை 4 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x