Last Updated : 15 Aug, 2020 03:58 PM

 

Published : 15 Aug 2020 03:58 PM
Last Updated : 15 Aug 2020 03:58 PM

கரோனா தாக்கம் குறைந்து முழுமனநிறைவு ஏற்படாதவரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது: முதல்வர் கேஜ்ரிவால் திட்டவட்டம்

டெல்லி தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றியபின் முதல்வர் கேஜ்ரிவால் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

டெல்லியில் கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு ஏற்படாதவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

டெல்லி அரசு சார்பில் இன்று 74-வது சுதந்திரதின விழா இன்று தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை ெசலுத்தினார். வழக்கமாக சத்ராசல் அரங்கில் நடக்கும் சுதந்திரதினவிழா, கரோனா வைரஸ் பரவல் காரணமா தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டது.

சுதந்திரதின விழாவில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:

கடந்த இரு மாதங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியில் கரோனா வைரஸ் தாக்கம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த மத்திய அரசு, அரசு துறைகள், கரோனா போர் வீரர்கள் பல்வேறு அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

கரோனாவில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்றபின்பும் சுவாசிப்பதில் பெரும் சிரமம் இருப்பதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்த வாரத்திலிருந்து ஆக்ஸிஜன் அளிக்கும் திட்டத்தை கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு செயல்படுத்த இருக்கிறோம்.

ஆம் ஆத்மி அரசைப் பொறுத்தவரை பள்ளிக் குழந்தைகளின் உடல்நலன், பாதுகாப்பு மிகவும் முக்கியம். நான் சந்தித்த பலரும் என்னிடம் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் அனைவருக்கும் உறுதியளிப்பது என்னவென்றால், டெல்லியில் கரோனா தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு அடையாதவரை பள்ளிகள் திறக்கப்படாது.

கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பிளாஸ்மா தெரபி சிகிச்சை இரு முறையையும் டெல்லிஅரசுதான் கொண்டு வந்தது.

டெல்லியில் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டுவருவது சவாலானது. ஆனால், டெல்லி மக்கள் ஆதரவுடன் மீண்டும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரும் என நம்புகிறேன். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

டெல்லியில் கரோனா வைரஸ் தாக்கத்தை விரைவாக குறைத்தது குறித்து உலக நாடுகளே வியப்பாகப் பார்க்கின்றன இதை ஆய்வு செய்ய உள்ளன. ஒவ்வொருவரின் முயற்சியால்தான் இது சாத்தியமாகியுள்ளது.

உலகளவில் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்போது, டெல்லியில் பெரிய அளவுக்கு தற்போது பாதிப்பை ஏற்படுத்தாமல் கட்டுக்குள் இருந்து வருகிறது. இதற்கு டெல்லியில் வாழும் 2 கோடி மக்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

ஜூன் மாதம் டெல்லியில் கரோனா தாக்கத்தைப் பார்த்த மக்கள் டெல்லியைவிட்டு சென்றுவிடலாம் என்று அச்சப்பட்டனர். ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது, நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.

டெல்லியின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேலைவாய்ப்பு உருவாக்குதல், வாட் வரி குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை ரூ.8 வரை குறைப்பு போன்றவற்றை செய்து பொருளதாார வளர்ச்சியை வேகப்படுத்தி வருகிறோம்.

கரோனா வைரஸ் மீது கவனத்தைச் செலுத்தும் அதேவேளையில் டெங்கு காய்ச்சல் மீதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டைப்போலவே செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுபிரச்சாரம் தொடங்கப்படும்.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x