

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது, அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 65 ஆயிரத்து 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 25 லட்சத்து 26 ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 7-ம் தேதியிலிருந்து நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 7-ம் தேதி 20 லட்சத்தை எட்டிய நிலையில் 8 நாட்களில் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மாநிலங்களில் இருந்துமட்டும் நேற்று ஒரேநாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆறுதல் தரும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை18 லட்சத்து 8 ஆயிரத்து 936 பேராக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 71.61 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த எண்ணிக்கையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை என்பது, 26.45 சதவீதம் மட்டுமே.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 996 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 49ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு 1.94 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 364 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 117 பேரும், கர்நாடகாவில் 104 பேரும், ஆந்திராவில் 97 பேரும் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் 60 பேர், உத்தரப்பிரதேசத்தில் 55 பேர், பஞ்சாப்பில் 25 பேர், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், பிஹாரில் தலா 16 பேர், குஜராத், ஜார்க்கண்டில் தலா 15 பேர், ராஜஸ்தானில் 13 பேர், டெல்லி, ஜம்மு காஷ்மீரில் தலா 11 பேர், கேரளா, ஒடிசா, தெலங்கானாவில் தலா 10 பேர் உயிரிழந்தனர்.
ஹரியானாவில் 7 பேர், அசாமில் 6 பேர், புதுச்சேரி, திரிபுரா, உத்தரகாண்டில் தலா 4 பேர், அந்தமான் நிகோபர் தீவுகள், கோவாவில் தலா 2 பேர், அருணாச்சலப்பிரதேசம், சண்டிகரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, நேற்று மட்டும் கரோனா மாதிரி பரிசோதனை 8,68,679 செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாதிரி பரிசோதனை எண்ணிக்கை 2.85 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 364 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 19 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 51ஆயிரத்து 865பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 117 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 11 ஆயிரத்து 366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,178 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 196 பேர் சிகிச்சையில் உள்ளனர். 15 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,746 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 79,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 104 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,717 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 13,146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.