Last Updated : 13 Aug, 2020 04:33 PM

 

Published : 13 Aug 2020 04:33 PM
Last Updated : 13 Aug 2020 04:33 PM

ராஜஸ்தான் சட்டப்பேரவை நாளை கூடுகிறது: அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியான பாஜக முடிவு செய்துள்ளது.

ஜெய்ப்பூரில் இன்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.

காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்தார்.

சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட 3 முறை அரசு சார்பில் கடிதம் அளித்தும் அதை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திருப்பி அனுப்பினார்.

4-வது முறையாக அமைச்சரவை அனுப்பிய கடிதத்தை ஏற்ற ஆளுநர் மிஸ்ரா, (நாளை) ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டார்.

இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்எல்ஏக்கள் 6 பேர் அசோல் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே: படம் | ஏஎன்ஐ.

பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை காங்கிரஸ் எம்எல்ஏக்களாக அறிவித்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குத் தொடர்ந்துள்ளது.

மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, அசோக் கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது அசோக் கெலாட் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே அசோக் கெலாட் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சச்சின் பைலட், கடந்த இரு நாட்களுக்கு முன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் மீண்டும் காங்கிரஸில் சச்சின் பைலட் இணைந்துள்ளார். மேலும், ராஜஸ்தான் அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை, அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அரசை வலுப்பெறச் செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் அரசுக்கு 101 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், காங்கிரஸ் கூட்டணிக்கு 107 எம்எல்ஏக்கள் ஆதரவும், சில சுயேச்சை எம்எல்ஏக்களிப் ஆதரவும் இருக்கிறது.

இந்தச் சூழலில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் சதீஸ் பூனியா, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா ஆகியோர் பங்கேற்றனர்.

குலாப் சந்த் கட்டாரியா பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ

இந்தக் கூட்டத்துக்குப்பின் எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “சட்டப்பேரவைக் கூட்டம் நாளை தொடங்கியதும், ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

ஆளும் அரசுக்குள் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. அவர்கள் செல்லும் வழியைப் பார்த்தால் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரலாம். இல்லாவிட்டால் நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கோருவோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x