Last Updated : 12 Aug, 2020 04:28 PM

 

Published : 12 Aug 2020 04:28 PM
Last Updated : 12 Aug 2020 04:28 PM

மத்திய விஸ்டா திட்டம்: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு 3 நிறுவனங்கள் தேர்வு 


மத்திய அரசு விஸ்டா திட்டத்தின் கீழ் எழுப்ப உள்ள புதிய நடாளுமன்றக் கட்டிடத்துக்கு விருப்பம் தெரிவித்து 7 நிறுவனங்கள் மத்திய அரசிடம் தகுதி, விருப்ப விண்ணபங்களைத் தாக்கல் செய்து நிலையில் அதில் 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம், டாடா ப்ராஜெக்ட் லிமிடெட், ஷபூர்ஜி பலூன்ஜி அன்ட் கோ பிரைவட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்கள் ேதர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

இப்போதைய நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழைமையானது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.

இதற்காக மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.889 கோடியாகும், 21 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.

நீண்டகாலமாக கிடப்பில் இருந்த இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
இந்த புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தை செயல்படுத்தும் தகுதியான நிறுவனங்களிடம் மத்திய அரசின் பொதுப்பணித்துறை விருப்ப மனுக்களைக் கோரி இருந்தது.

அந்த வகையில் 7 நிறுவனங்கள் விருப்பத் தகுதி மனுக்களை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் உத்தரப்பிரதேச அரசின் ராஜ்கியா நிர்மான் நிகம் லிமிடெட், டாடா புராஜெக்ட்ஸ், லார்ஸன் அன்ட் டூப்ரோ லிமிட், ஐடிடி சிமென்ட்டேஷன் லிமிட், என்சிசி லிமிட், ஷாபூர்ஜி பலோன்ஜி அன்ட் கோ பிரைவேட் லிமிட், மற்றும் பிஎஸ்பி புரோஜெக்ட்ஸ் ஆகியவை விருப்ப மனுக்கள் அளித்திருந்தன.

இதில் 3 நிறுவனங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொதுப்பணிகள் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய பொதுப்பணிகள் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, “ ரூ.889 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், பழையகட்டிடத்துக்கு அருகே பிளாட் எண் 118-ல் கட்டப்பட உள்ளது. புதிய கட்டிடம் சிமெண்ட் கான்கிரீட் அடிப்படையில் கட்டப்பட உள்ளது, பூமியிலிருந்து 1.8 மீட்டர் உயரத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இந்த கட்டிடம் 21 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். இந்த திட்டத்தை ஏற்று செயல்படுத்த 7 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. இதில் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம், டாடா ப்ராஜெக்ட் லிமிட், ஷபூர்ஜி பலூன்ஜி அன்ட் கோ பிரைவட் லிமிட் ஆகிய 3 நிறுவனங்கள் ேதர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டம் முடிக்கப்படும்வரை தற்போது செயல்பட்டுவரும் நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x