Last Updated : 12 Aug, 2020 08:42 AM

 

Published : 12 Aug 2020 08:42 AM
Last Updated : 12 Aug 2020 08:42 AM

ரூ.1,000 கோடி ஹவாலா மோசடி :இந்தியாவில் உள்ள சீனர்கள், உதவியாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை

கோப்புப்படம்

புதுடெல்லி


போலியான நிறுவனங்களை உருவாக்கி ரூ.ஆயிரம் கோடி ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரையடுத்து, இந்தியாவில் வசிக்கும் சில சீனர்கள், மற்றும் அவர்களின் இந்திய உதவியாளர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

இது குறித்து மத்திய நேரடிவரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

போலியான நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எங்களுக்கு உறுதிப்படுத்தக்கூடிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, டெல்லி, குர்கவன், காஜியாபாத் ஆகிய நகரங்களில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் பல சீனர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு உதவி செய்துவரும் இந்தியர்களின் வீடுகளிலும் (செவ்வாய்கிழமை) இன்று ஆய்வு செய்தோம்.

சீனவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வர்த்தக நிறுவனங்களை திறப்பதாகக் கூறி போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.100 கோடி பெற்றுள்ளன. உறுதியான தகவல் கிடைத்ததையடுத்து, சீனாவைச் சேர்ந்த சிலரின் வீடுகளிலும், சட்டவிரோத மற்றும் ஹவாலாப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் சிலரின் வீடுகளிலும் சோதனை செய்தோம். அதன்படி சில போலியான நிறுவனங்கள் குறித்த விவரங்களையும் கைப்பற்றியுள்ளோம்.

சீனாவைச் சேர்ந்த ஒருவர் போலியான இந்தியப் பாஸ்போர்ட் பெற்று இந்த பணத்தைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த போலி பாஸ்போர்ட்டை மணிப்பூரிலிருந்து சீனாவைச் சேர்ந்தவர் பெற்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த அந்த நபரை நாங்கள் கைது செய்துள்ளோம், தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது.

போலி பாஸ்போர்ட் வைத்திருந்த சீனாவைச் சேர்ந்த அந்த நபர் மீது பாஸ்போர்ட் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரை விரைவில் போலீஸார் முறைப்படி கைது செய்வார்கள். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியாகியிருப்பதால், இந்த வழக்கை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு மாற்றப்படும் அவர்கள் விசாரிக்க உள்ளனர்.

இந்த சோதனையின் முடிவில் சீனாவைச் சேர்ந்த சிலருக்கு போலியான பெயரில் 40-க்கும் ேமற்பட்ட வங்கிக்கணக்குகள் இருக்கின்றன என்பதும் ரூ.1000 கோடி அளவு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

ஹவாலா பணப்பரிமாற்றம், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடக்கவும் வங்கி ஊழியர்கள், கணக்குத் தணிக்கையாளர்கள் போன்றோர் இதில் ஈடுபட்டு, போலியாக ஆவணங்கள் தயாரித்துள்ளதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங், அமெரிக்க டாலர்கள் ஹவாலா பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x