Published : 11 Aug 2020 09:26 PM
Last Updated : 11 Aug 2020 09:26 PM

கேரளத்தில் கரோனாவுடன் டெங்கு, எலிக்காய்ச்சலும் பரவுகிறது: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

திருவனந்தபுரம்

கேரளத்தில் கரோனாவுடன் டெங்கு, எலிக்காய்ச்சலும் பரவுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (செவ்வாய்க் கிழமை) திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

''கேரளாவில் இன்று 1,417 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,426 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,046 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மரணமடைந்த திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலாவைச் சேர்ந்த 68 வயதான செல்லையன், கண்ணூர் மாவட்டம் கோளயாடு பகுதியைச் சேர்ந்த 75 வயதான கும்ப மாராடி என்ற மூதாட்டி, ஆகஸ்ட் 1-ம் தேதி மரணமடைந்த திருவனந்தபுரம், வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்த 80 வயதான மணியன், ஆகஸ்ட் 3-ம் தேதி மரணமடைந்த எர்ணாகுளம் மாவட்டம் செல்லானம் பகுதியைச் சேர்ந்த 87 வயதான ரீத்தா சார்லஸ் என்ற மூதாட்டி, திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாடு பகுதியைச் சேர்ந்த 52 வயதான பிரேமா ஆகியோருக்குக் கரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை கேரளாவில் கரானோ பாதித்து மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 297 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 242 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 158 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 147 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 146 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 141 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 133 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 32 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 30 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 25 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 24 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 20 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 18 பேர் வயநாடு மாவட்டத்தையும், 4 பேர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 75 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 62 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் இன்று 1,242 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 105 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நோய் பாதித்த 297 பேரில் 279 பேருக்கும் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. சுகாதாரத் துறையைச் சேர்ந்த 36 பேருக்கு இன்று நோய் பரவி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 பேருக்கு நோய் பரவியுள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 12,721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,49,707 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,37,586 பேர் வீடுகளிலும், 12,121 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,456 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 21, 625 பரிசோதனைகள் நடத்தப்பட்ட்டுள்ளன. சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை மொத்தம் 10,27,433 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 6,700 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.

இது தவிர சுகாதாரத் துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்பட சமூக நெருக்கமுள்ள 1,39,543 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,505 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் பட்டியலில் இன்று 25 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் 523 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.

கேரளாவில் கரோனாவுக்கு அடுத்தபடியாக டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக் காய்ச்சல் பரவி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரத்திற்கு அடுத்தபடியாக மலப்புரம் மாவட்டத்திலும் நோய் வேகமாகப் பரவி வருகிறது. திருவனந்தபுரம், மலப்புரம் மற்றும் ஆழப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் தற்போது கரோனா நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே இந்த மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளி மாநிலங்களிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக வந்த 68 மீனவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலத்திலிருந்து வரும் மீனவர்கள் படகிலேயே தங்கியிருப்பது கவனத்திற்கு வந்துள்ளது. ஏராளமான மீனவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்யாமலும் , முறையாக பாஸ் இல்லாமலும் கேரளாவுக்கு மீன்பிடிக்க வருகின்றனர். இதை அனுமதிக்க முடியாது. எனவே கோழிக்கோடு மாவட்டம், பேப்பூர் உள்பட பல்வேறு மீன்பிடித் துறைமுகங்களில் இது தொடர்பாகத் தீவிரமாகக் கண்காணிப்பு நடத்தப்படுகிறது. முகக்கவசம் அணியாமல் பிடிபடுபவர்கள் குறித்த பெயர், விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது முறையும் பிடிபட்டால் அவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

ராஜமலை நிலச்சரிவில் சிக்கியவர்களின் 3 உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் உட்படக் கல்வி நிறுவனங்களை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது''.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x