Published : 22 Sep 2015 10:37 AM
Last Updated : 22 Sep 2015 10:37 AM

போதையில் பள்ளத்தில் விழுந்தவரை கவனிக்காமல் உயிருடன் புதைத்து சாலை அமைத்த பணியாளர்கள்: மத்தியப் பிரதேசத்தில் பரிதாபம்

மது போதையில் பள்ளத்தில் விழுந்தவரை கவனிக்காமல் சாலை பணியாளர்கள் மண்போட்டு மூடி உயிருடன் புதைத்துவிட்டனர். மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவத்தால் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி கிராமத்தைச் சேர்ந்தவர் லடோரி லால் (45). இவர் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். சென்ற இடத்தில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால், லடோரி லால் மட்டும் வீடு திரும்பினார். பிறகு ஒரு மணி நேரம் கழித்து அவருடைய மனைவியும் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், வீடு பூட்டியிருந்தது. கணவனை காணவில்லை.

இதுகுறித்து கிராமத்தில் இருந்தவர்களிடம் லடோரியின் மனைவி கூறியிருக்கிறார். உடனே கிராம மக்கள் சேர்ந்து டார்ச் லைட் மூலம் லடோரியை எல்லா இடங்களிலும் தேடினர். அப்போது கிராமத்தில் புதிதாக போடப்பட்டிருந்த தார் சாலையில் லடோரி லால் அணிந்திருந்த சட்டை கிழிந்து ஒட்டியிருந்தது. அதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த பகுதியை தீவிரமாக ஆராய்ந்தனர்.

அப்போது, தார் சாலையில் ஒரு பகுதியில் லடோரியின் கை தெரிந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த பகுதியில் தோண்டி பார்த்துள்ளனர். அங்கு லடோரியின் உடல் சிதைந்து கிடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் லடோரி மது குடித்து விட்டு வந்ததாகவும் போதையில் அவர் பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அது தெரியாமல், பள்ளத்தில் மண்போட்டு மூடி தார் ஊற்றி ரோடு ரோலர் மூலம் சாலையை செப்பனிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம மக்களை போலீஸார் சமாதானப் படுத்தினர். பின்னர் லடோரியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதற்கிடையில், ரோடு ரோலர் ஓட்டுநரும், சாலை பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x