Last Updated : 11 Aug, 2020 03:27 PM

 

Published : 11 Aug 2020 03:27 PM
Last Updated : 11 Aug 2020 03:27 PM

பரிசோதனைகளை அதிகரியுங்கள்; 10 மாநிலங்கள் கரோனாவை வென்றால் நாடே கரோனாவை வென்றுவிடும்- முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பரவல் அதிகம் உள்ள,தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் மாநில முதல்வர்களுடன், இன்று ஆகஸ்ட் 11-ம் தேதி காலை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடி, “எந்தெந்த மாநிலங்களில் கரோனா உடல் பரிசோதனைகள் குறைவாக உள்ளதோ அங்குதான் கரோனா பாசிட்டிவ் அதிகமாகிறது. குறிப்பாக பிஹார், குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். இந்த மாநிலங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.

இன்றைய தேதியில் 80% கரோனா தொற்றுக்கள் இந்த மாநிலங்களில்தான் உள்ளன. எனவே கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மாநிலத்தின் பங்கு மிக முக்கியமானது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் அதிகம், இந்த 10 மாநிலங்களில்தான் அதிக தொற்றுக்கள் உள்ளன.

எனவே இந்த 10 மாநிலங்கள் ஒருங்கிணைந்து பேசி, ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொருவரின் அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த 10 மாநிலங்களில் கரோனாவை வென்று விட்டால், தேசம் கரோனாவை வெல்லும்

இறப்பு குறைந்து, குணமடைவோர் அதிகரிப்பது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். சுகாதார பணியாளர்கள், ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். கொரோனா பரவல் நேரம் ஒடிக்கொண்டிருக்கிறது. புதிய சூழலும் உருவாகிறது.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது. ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகம் பாதித்த மாநிலங்கள், பேசும் போது, தடுப்பு பணிகள் வலுவடையும். நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது. பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

மக்களும் இப்போது விழிப்புணர்வு பெற்று ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இது நம் விழிப்புணர்வு முயற்சிகளின் பலன்களாகும். அதனால்தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

கரோனா தொற்றை 72 மணி நேரத்தில் நாம் கண்டுபிடித்து விட்டால் தொற்று அதன் தீவிரத்தை இழப்பதை நாம் காண முடிகிறது என்று நிபுணர்களும் இப்போது கூறுகின்றனர். மாநிலமாக இருந்தாலும் மத்தியாக இருந்தாலும் நாம் ஒன்றிணைந்து ஒரு அணியாகச் செயல்படும்போது, குழு உணர்வுடன் பணியாற்றும் போது நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது” என்றார் மோடி.

இந்தக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத், எடப்பாடி பழனிசாமி, மம்தா, அமரீந்தர் சிங், சந்திரசேகரா ராவ், உத்தவ் தாக்கரே, விஜய் ரூபானி, நிதிஷ் குமார், ஜெகன்மோகன் ரெட்டி ஆகிய முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x