Published : 10 Aug 2020 10:42 PM
Last Updated : 10 Aug 2020 10:42 PM

முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: சச்சின் பைலட் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க 3 பேர் கமிட்டி: சோனியா காந்தி முடிவு

புதுடெல்லி

ராஜஸ்தான் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.

காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்தார்.

சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட 3 முறை அரசு சார்பில் கடிதம் அளித்தும் அதை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திருப்பி அனுப்பினார்.

4-வது முறையாக அமைச்சரவை அனுப்பிய கடிதத்தை ஏற்ற ஆளுநர் மிஸ்ரா, ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எம்எல்ஏக்கள் அசோல் கெலாட் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை காங்கிரஸ் எம்எல்ஏக்களாக அறிவித்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, அசோக் கெலாட் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். இதனால் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது அசோக் கெலாட் அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்தது.

இந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசியுள்ளார். ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு சுமுகமான மாற்றத்தை உருவாக்கும் என தெரிகிறது.

இந்தநிலையில் ராஜஸ்தான் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட் சந்திப்பு சுமூகமாக நடைபெற்றுள்ளது. ராஜஸ்தானில் நிலவி வரும் அரசியல் குழப்பத்துக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கெலாட்டுடன் சோனியா காந்தி பேசினார். மேலும் சச்சின் பைலட் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார்’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சச்சின் பைலட் சோனியா காந்தியின் முடிவை வரவேற்பதாகவும், பிரச்சினை விரைவில் தீரும் எனவும் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x