

பவுத்த மதத்தை உருவாக்கிய கவுதம புத்தர் மிகப்பெரிய இந்தியர் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதையடுத்து பகவான் புத்தரின் பிறப்பு நேபாள்தான் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளத்தில் பிற தலைவர்களும் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள், ஜெய்சங்கரின் கருத்து கடும் ஆட்சேபணைக்குரியது என்றார்.
“வரலாற்று ரீதியாகவும், தொல்லியல் ஆதாரங்களும் கூறுவது கவுதம புத்தரின் பிறப்பிடம் நேபாளத்தில் உள்ள லும்பினி என்பதே. லும்பினிதான் புத்தர் பிறந்த இடம், பவுத்தத்தின் ஊற்றுக்கண். யுனெஸ்கோ பாரம்பரிய இடமாகவும் திகழ்கிறது.” என்று நேபாள் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் கூறியதோடு, இவையெல்லாம் மறுக்க முடியாத உண்மைகள் என்றார்.
சனிக்கிழமையன்று இந்திய தொழிற்துறை கூட்டமைப்பினருடன் நடந்த உரையாடலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ‘இரண்டு மகா இந்தியர்களில் ஒருவர் புத்தர், இன்னொருவர் மகாத்மா காந்தி’ என்றார்.
இந்நிலையில் லும்பினியில் பிறந்த புத்தரை எப்படி ஜெய்சங்கர் இந்தியர் என்று கூறலாம் என்று நேபாளம் கேள்வி எழுப்பியுள்ளது.
புத்தரின் பிறப்பிடம் என்று நேபாள் லும்பினியை அந்நாட்டு மக்கள் கொண்டாடுகையில் அவர் புத்தொளி ஞானம் பெற்ற கயா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.