Last Updated : 10 Aug, 2020 08:11 AM

 

Published : 10 Aug 2020 08:11 AM
Last Updated : 10 Aug 2020 08:11 AM

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1.32 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த இரு வாரங்களாக குடகு, மைசூரு, ஷிமோகா, ஹாசன், பெல்லாரி, பீதர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதே போல, கேரளாவில் வயநாட்டில் கனமழை பெய்து வருவதால், கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 61 ஆயிரத்து 475 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விநாடிக்கு 63 ஆயிரத்து 500 கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மண்டியா மாவட்டத்தில் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 118.97 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 97 ஆயிரத்து 165 கனஅடி நீர் வரும் நிலையில், விநாடிக்கு 69 ஆயிரத்து 342 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு இதே அளவு நீர்வரத்து தொடர்ந்தால் இன்னும் சில தினங்களில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 675 கனஅடி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நஞ்சன்கூடு, தலக்காடு, மண்டியா, ரங்கப்பட்டணா, கொள்ளேகால், மேகேதாட்டு உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. அங்குள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x