Published : 10 Aug 2020 08:08 AM
Last Updated : 10 Aug 2020 08:08 AM

கரோனாவுக்கு சிகிச்சை அளித்த விஜயவாடா மருத்துவமனையில் தீ விபத்தில் சிக்கி 11 நோயாளிகள் உயிரிழப்பு: தலா ரூ.50 லட்சம் நிதி உதவி அறிவித்தது ஆந்திர அரசு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்11 நோயாளிகள் உயிரிழந்தனர். இவர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

விஜயவாடாவில் உள்ள ரமேஷ் மருத்துவமனை, அங்குள்ள சுவர்ணா பேலஸ் ஹோட்டலை வாடகைக்கு எடுத்து அதில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இங்கு 30 நோயாளிகள் தங்கி கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மருத்துவமனை ஊழியர்கள் 10 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சுவர்ணா பேலஸில் உள்ள முதலாவது மாடியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனே புகை கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதனால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அலறினர். அதற்குள் தீ மளமளவென பரவியது. இதனைக் கண்டு பயந்த 4 பேர் முதல் மாடியிலிருந்து கீழே குதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்குள் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

காப்பாற்றப்பட்ட மற்றவர்கள் லப்பிபேட்டா மற்றும் பெருநகர மைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. சம்பவ இடத்திற்கு விஜயவாடா மாவட்ட ஆட்சியர் நிஜாமுதீன், நகர காவல் ஆணையர் நிவாசுலு மற்றும் பலர் விரைந்து சென்று மீட்புப் பணியை முடுக்கி விட்டனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே தீ விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்ததாகும், இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமெனவும், அவர்களுக்கு தன்னுடைய இரங்கலையும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x