Published : 10 Aug 2020 08:04 AM
Last Updated : 10 Aug 2020 08:04 AM

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் அகதிகள் 11 பேர் மர்ம மரணம்

ஜோத்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம், லொட்டா கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு குடும்பத்தினர் குடிசை அமைத்து வசித்து வந்தனர். அந்த குடிசையில் வசித்தவர்கள் இறந்து கிடப்பதாக நேற்று காலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இறந்திருப்பது தெரிந்தது.

இதுகுறித்து ஜோத்பூர் எஸ்பி ராகுல் பரத் கூறும்போது, ‘‘இறந்தவர்கள் உடலில் எந்த காயங்களும் இல்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம்’’ என்றார்.

இதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் குடிசைக்கு வெளியே இரவில் படுத்துள்ளார். அவர் உயிரோடுதான் இருக்கிறார். இரவில் என்ன நடந்தது என்பது அவருக்கும் தெரியவில்லை. தனது உறவினர்கள் இறந்த விவரம் காலையில்தான் அவருக்கு தெரிந்துள்ளது. தனக்கு நடந்தது எதுவும் தெரியாது என்று அவர் கூறியதாகவும், இறந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த பீல் என்ற சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள் என்றும் ராகுல் பரத் கூறினார். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x