Published : 09 Aug 2020 04:50 PM
Last Updated : 09 Aug 2020 04:50 PM

அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது: வெங்கய்ய நாயுடு ஆதங்கம்

அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

வெள்ளையேனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு இன்றுடன் 78 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி வெங்கய்யா நாயுடு தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாட்டில் ஒற்றுமை இல்லாததால், 1000-1947-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நடைபெற்ற அந்நியப் படையெடுப்புகள் மற்றும் ஏகாதிபத்திய சுரண்டல் நடைபெற்றதை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் இந்த மிக நீண்ட காலகட்டத்தில், நமது கலாச்சாரம் அழிக்கப்பட்டதுடன், ஒரு காலத்தில் வளமிக்கதாக இருந்த இந்தியாவின் பொருளாதாரம் சுரண்டப்பட்டது போன்ற பெரும் விலைகொடுக்க நேரிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையாகப் போராடி 1947-இல் பெற்ற சுதந்திரம், 200 ஆண்டு காலனி ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவதாக மட்டுமின்றி, இந்தியர்களிடையே நிலவிய ஒற்றுமையின்மை காரணமாக, படையெடுப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் காலனி ஆதிக்க சக்திகளால் சூறையாடப்பட்ட ஆயிரம் ஆண்டு இருண்ட
காலத்திற்கும் முடிவு கட்டியதாக குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

“ஒருவர் மற்றவரது உடைமைகள் மற்றும் ஒற்றுமை நோக்கம், செயல்பாடு குறித்து அறிந்திராமல் இருந்ததால், நீண்டகால அடிமைத்தனத்திற்கும், இந்தியாவை சுரண்டுவதற்கும் வழிவகுத்துவிட்டது. இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் மூலம், இந்தியர்கள் அனைவரும், நாம் இந்தியர்கள் என்ற உணர்வைப் பகிர்ந்துகொள்வதோடு, அவரவர் கலாச்சார நற்பண்புகள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இவை அனைத்தும் தேசபக்தி உணர்வுக்கு ஊக்கமளிக்கும். இந்தியா பிளவுபட்டால், குழம்பிய குட்டையில் எளிதில் மீன் பிடிக்கலாம் என்ற உணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்திவிடும். வலிமையான, ஒன்றுபட்ட மற்றும் உணர்வால் ஒருங்கிணைந்த இந்தியா தான், நமது எதிரிகளின் தீய நோக்கங்களிலிருந்து நமக்கு சிறந்த பாதுகாப்பை அளிப்பதோடு, கேள்வி கேட்கும் நோக்கத்தையும் ஏற்படுத்தும்“ என்றும் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான அந்நியப் படையெடுப்புகளின் விளைவாக, 1000-மாவது ஆண்டு முதல் நாட்டின் வளங்கள் சுரண்டப்பட்டதை எடுத்துரைத்துள்ள வெங்கய்யா நாயுடு, சோமநாதர் கோவில் அழிக்கப்பட்டதோடு, 925 ஆண்டுகள் கழித்து, நாடு சுதந்திரம் அடைந்த பிறகே, மீண்டும் அக்கோவிலைக் கட்ட முடிந்ததோடு, இம்மாதம் 5-ஆம் தேதி நடைபெற்ற பூமிபூஜை மூலம் அயோத்தியில் மீண்டும் கோவில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபல பொருளாதார நிபுணர் உத்ஸா பட்நாயக் கூறியுள்ளபடி, 1765-1938ஆம் ஆண்டு வரை பல்வேறு வடிவங்களிலும், 45 டிரில்லியன் டாலர் அளவிலான நமது வளங்கள், அதாவது 2018-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தைவிட 17 மடங்கு அளவிற்கு பிரிட்டிஷ்காரர்களால் சுரண்டப்பட்டதையும் .வெங்கய்யா நாயுடு நினைவு
கூர்ந்துள்ளார். இதுபோன்ற பொருளாதாரச் சுரண்டல்கள், பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்து வந்த இந்தியாவை, மிக மோசமான வறுமை நிலைக்குத் தள்ளிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

2022-ஆம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினம் (பவளவிழா) கொண்டாடப்பட இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள வெங்கய்யா நாயுடு, வறுமை ஒழிபபு, எழுத்தறிவின்மை, சமத்துவமின்மை, பாலினப் பாகுபாடு, ஊழல் மற்றும் அனைத்து வகையான சமூகத் தீமைகளையும் ஒழிப்பதன் மூலம், தேசப்பிதா மகாத்மா கந்தி மற்றும் ஆர்வமுள்ள இந்தியர்களின் கனவை நனவாக்க உறுதியேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x