Published : 27 May 2014 10:03 AM
Last Updated : 27 May 2014 10:03 AM
நரேந்திர மோடி பற்றி அவதூறாக ‘வாட்ஸ் அப்'-பில் குறுஞ்செய்தி அனுப்பிய கர்நாடக மாணவரை சைபர் கிரைம் போலீஸார் பெங்களூரில் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெல்காம் மாவட்டம், பட்டத்தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் சையித் வக்காஸ் பர்மாவர் (24). இவர் அங்குள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவருடைய தந்தை ஷமிமுல்லா பர்மாவர் கர்நாடகாவில் பரவலாக அறியப்பெற்ற உருது கவிஞர். மக்களவைத் தேர்தலின் போது வக்காஸ் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது வக்காஸ் தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். பாஜகவின் பிரச்சார ஸ்லோகனான “இதுதான் சிறந்த தருணம்… மோடியை தேர்ந்தெடுங்கள்” என்பதை, “இது தான் சிறந்த தருணம்… மோடிக்கு இறுதி அஞ்சலி செலுத்துங்கள்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இந்த குறுஞ்செய்தி ஒவ்வொருவராகக் கடந்து பாஜக தொண்டர் ஜெயந்த் தினேகர் என்பவருக்கும் சென்றுள்ளது.
இதையடுத்து ஜெயந்த் தினேகர் பெல்காம் சைபர் கிரைம் போலீஸாரிடம் கடந்த 22-ம் தேதி புகார் அளித்துள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் வக்காஸின் தொலைபேசியை கண்காணித்தபோது அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூர் சைபர் கிரைம் போலீஸாரால் வக்காஸ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். விசாரணையில், வக்காஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் மீது ஐ.டி. சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
கண்டனம்
வக்காஸ் கைது குறித்து, பெல்காம் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முத்தப்பா அங்காடி, ‘தி இந்து'விடம் கூறுகையில், “வக்காஸ் கைது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரை உடனே விடுதலை செய்யாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம். சட்டப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வோம்” என்றார்.
இதுபோல் பல்வேறு மாணவர் மற்றும் அரசியல் அமைப்புகள் வக்காஸின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT