Last Updated : 09 Aug, 2020 10:22 AM

 

Published : 09 Aug 2020 10:22 AM
Last Updated : 09 Aug 2020 10:22 AM

உ.பி. பொதுமக்கள் மனுக்களின் குறைகளை தீர்ப்பதில் முதலிடம்: தமிழரான ஐஏஎஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள்

கோப்புப்படம்

புதுடெல்லி

உத்திரப்பிரதேச பொதுமக்கள் மனுக்களின் குறைகளை தீர்ப்பதில் வாரணாசியின் துணை ஆட்சியரின் அலுவலகம் முதலிடம் பெற்றுள்ளது. இதன் ஐஏஎஸ் அதிகாரியான தமிழர் மணிகண்டனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

வட்டார வளர்ச்சி அதிகாரி முதல் உ.பி முதல் அமைச்சர் அலுவலகம் வரை பொதுமக்களிடம் குறைகளை தீர்க்க மனுக்கள் பெறப்படுவது உண்டு. இதுபோல், உ.பியில் மொத்தம் 2035 அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படுகின்றன.

இங்கு பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் உ.பி அரசு கணக்கெடுப்பு நடத்தி வெளியிடுகிறது. பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதில் சிறந்த பணியாற்றிய அலுவலகங்கள் இதில் மாதந்தோறும் வரிசைப்படுத்தப்படுகின்றன.

இதன் தற்போதைய வெளியிட்டில், கடந்த ஜூன் மாதம் வாரணாசி தாலுக்காக்களில் ஒன்றான பின்டரா அலுவலகம் பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதில் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு பெறப்பட்ட 1681 மனுக்களின் நூறு சதவிகிதக் குறைகளை தீர்த்தவர் வாரணாசி மாவட்ட துணை ஆட்சியரும் தமிழருமான மணிகண்டன்.ஐஏஎஸ்.

இதற்காக அவருக்கு பலதரப்பினரால் பாராட்டுகள் குவிகின்றன. 2017 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பெற்றவர், பிரதமர் நரேந்தர மோடியின் மக்களவை தொகுதியில் துணை ஆட்சியராக உள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் நெய்வேலியை சேர்ந்த தமிழரான மணிகண்டன்.ஐஏஎஸ் கூறும்போது, ‘என்னிடம் வரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அவற்றை குறைந்தது நான்கு உதவி அதிகாரிகளின் அலுவலகம் அனுப்ப வேண்டும்.

இவை சேர்வதில் ஆகும் தாமதத்தை தவிர்க்க சமூகவலைதளங்கள் மூலம் மனுக்கள் அனுப்பி விடுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிகிறது. சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு மனு வந்துசேர்வதற்குள் அதன் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டு எனக்கு அறிக்கையும் வந்து சேர்ந்து விடுகிறது.

மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்களையும் அவ்வப்போது நான் அதிக கவனத்துடன் நடத்தியதன் பலன் கிடைத்துள்ளது. இதன் பின்னணியை கேட்டும், பாராட்டியும் எனது உயர் அதிகாரிகள் பலரும் போன் செய்து வருவது பணியில் மேலும் சிறக்க ஊக்கமளிக்கிறது.’ எனத் தெரிவித்தார்.

உ.பி அரசு சார்பில் இந்த கணக்கெடுப்பிற்காகவே நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அன்றாடம் மனு அளித்த பொதுமக்களிடம் நேரிலோ, தொலைபேசியிலோ பேசுகின்றனர். அதில் அளிக்கப்படும் கருத்துக்களை பதிவுசெய்து தானியங்கி கணினி முறையில் மதிப்பீடு வழங்கப்படுகிறது.

இவற்றை ஒவ்வொரு மாதமும் உபியின் 75 மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தி மாநில அளவில் வரிசைப்படுத்தி வெளியிடப்படுகிறது. இதில், வாரணாசி மாவட்டத்தின் ஒரு அலுவலகம் மாநிலத்தில் முதலிடம் பெற்றதும் இதுவே முதல் முறையாகும்.

இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி மணிகண்டனை உ.பியின் நாளிதழ்களும் பாராட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன. கரோனாவின் ஊரடங்கினால் வாரணாசியில் சிக்கிய சுமார் 700 தமிழர்களை மீட்டு தமிழகம் அனுப்புவதிலும் முக்கிய பங்கு வகித்தவர் இந்த மணிகண்டன்.ஐஏஎஸ் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x