Last Updated : 09 Aug, 2020 08:53 AM

 

Published : 09 Aug 2020 08:53 AM
Last Updated : 09 Aug 2020 08:53 AM

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு வினாடிக்கு 81 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் குடகு, மைசூரு, ஷிமோகா, ஹாசன், பெல்லாரி, பீதர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெல்லாரி, பீஜாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

குடகில் இரவு பகலாக கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரி, லக்ஷ்மண தீர்த்தம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. கேரளாவில் வயநாட்டில் கனமழை பெய்துவருவதால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2282 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 62 ஆயிரத்து 816 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 62 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதே வேளையில் நேற்று பிற்பகல் 12 மணி வரை வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதே போல மண்டியாவில் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 115.79 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 67 ஆயிரத்து 817 கனஅடி நீர் வரும் நிலையில், வினாடிக்கு 18 ஆயிரத்து 955 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x