ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்

ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்
Updated on
1 min read

ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்களிடம் பேரம் நடப்பதாக புகார் எழுந்த நிலையில் அவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு வந்துள்ளனர்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது.

இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது. அப்போது தனது அரசுக்கு உள்ள பலத்தை நிரூபிக்க முதல்வர் கெலாட் முடிவு செய்துள்ளார். தனக்கு 102 எம்எல்ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டதால் குதிரை பேரம் தீவிரம் அடைந்துள்ளதாகவும் எம்எல்ஏ.க்களின் விலை முதல் தவணையாக ரூ.10 கோடி, மீண்டும் ரூ.15 கோடியில் இருந்து இப்போது வரம்பு இல்லாமல் அவர்களுக்கான விலை உயர்ந்துள்ளதாகவும் இந்த குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும் என்று சச்சின் பைலட்டை மறைமுகமாக அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த 3 வாரங்களாக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஜெய்ப்பூர் அருகே ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். அவர்கள் பின்னர் சிறப்பு விமானம் மூலம் ஜெய்சால்மாருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள பண்ணை வீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பாஜக எம்எல்ஏ 12 பேர் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனை பாஜக மறுத்தது.

இந்தநிலையில் ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ 6 பேர் இன்று குஜராத் மாநிலம் போர்பந்தர் வந்துள்ளனர். இதுகுறித்து 6 எம்எல்ஏக்களில் ஒருவரான நிர்மல் கும்வாத் கூறியதாவது:

ராஜஸ்தானில் அடுத்தடுத்து அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. முதல்வர் அசோக் கெலோட்டுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனால் பாஜக எம்எல்ஏக்களை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு துன்புறுத்துகிறது. சோம்நாத் கோயிலில் வழிபாடு நடத்தவே இங்கு வந்தோம். மேலும் சில பாஜக எம்எல்ஏக்கள் இங்கு வரக்கூடும்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in