Published : 08 Aug 2020 09:31 PM
Last Updated : 08 Aug 2020 09:31 PM

கேரளாவில் இன்று 1,420 பேருக்குக் கரோனா, அதிகபட்சமாக 1,715 பேர் குணமடைந்தனர்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி 

கேரளாவில் இன்று 1,420 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

''கேரளாவில் இன்று கரோனா பாதிப்பு எண்ணிக்கையிலும், குணமானவர்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. நோய் பாதிக்கப்பட்டவர்களும், குணமடைந்தவர்களும் இன்று அதிகம் ஆகும். இன்று கேரளாவில் 1,420 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,715 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இன்றுதான் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். ஆகஸ்ட் 3-ம் தேதி மரணமடைந்த காசர்கோட்டைச் சேர்ந்த 41 வயதான வினோத்குமார், 4-ம் தேதி மரணமடைந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த 63 வயதான சுலேகா, 5-ம் தேதி மரணமடைந்த கொல்லத்தைச் சேர்ந்த 60 வயதான செல்லப்பன், 6-ம் தேதி மரணமடைந்த எர்ணாகுளம் மாவட்டம் சேர்த்தலா பகுதியைச் சேர்ந்த 84 வயதான புருஷோத்தமன் ஆகியோர் கரோனா பாதித்து இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனா பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் இன்று மிக அதிகமாக 485 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 468 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. அவர்களில் 33 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. மேலும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 7 பேருக்கு நோய் பரவி உள்ளது. இந்த மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் இங்கு நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 777 பேர் நோயிலிருந்து குணம் அடைந்தனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 173 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 169 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 114 மலப்புரம் மாவட்டத்தையும், 101 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 73 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 64 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 57 கண்ணூர் மாவட்டத்தையும், தலா 41 பேர் கொல்லம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், 39 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 38 பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 15 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 10 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 108 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும், 60 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். இன்று 1,216 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. இதில் 92 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை. இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 30 பேருக்கு நோய் பரவி உள்ளது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 1,715 பேர் இன்று குணமடைந்தனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,866 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12,109 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 1,48,241 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,36,307 பேர் வீடுகளிலும், 11,934 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,665 பேர் பல்வேறு மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 27, 714 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை மொத்தம் 9,63,632 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 6,777 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இதுதவிர சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 1,36,336 பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,524 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இன்று மேலும் 13 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து நோய்த் தீவிரப் பகுதிகளின் எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது.

இன்று திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 100-ஐத் தாண்டி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று கடற்கரை கிராமங்களில் வரும் 16-ம் தேதி வரை ஊரடங்கு சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி முதல் விழிஞ்சம் துறைமுகத்தில் நிபந்தனையுடன் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சாலை மார்க்கெட்டில் கடைகள் கடும் நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x