Published : 08 Aug 2020 08:08 AM
Last Updated : 08 Aug 2020 08:08 AM

ஆந்திர மாநிலத்தில் கரோனா நோயாளி எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்தது.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 2,06,960 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,20,464 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 84,654 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் கரோனா வைரஸுக்கு நேற்று 89 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,842 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 3-ம் இடம்

ஆந்திராவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளதால், நாட்டில் மகாராஷ்டிரா, தமிழகத்தை தொடர்ந்து 3-வது இடத்தை ஆந்திரா பிடித்துள்ளது. மாநிலத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் கடந்த 1 வாரமாக பரிசோதனைகளை அதிகரித்ததால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் தலைவர் உயிரிழப்பு

திருப்பதியை அடுத்துள்ள வெதுகுப்பம் மண்டலம், வெங்கண்ணபல்லி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் அப்பலய்யா (62). கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இவர் திருப்பதியில் உள்ள ருய்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பயந்து கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் இருந்து அப்பலய்யா தப்பிச் சென்றார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் அலிபிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பலய்யாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x