Published : 08 Aug 2020 08:05 AM
Last Updated : 08 Aug 2020 08:05 AM

கேரள தங்கக் கடத்தல் வழக்கு முதல்வரிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் ஸ்வப்னா சுரேஷ்: என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தகவல்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ், முதல்வரிடத்தில் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் என்று என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உட்பட 12 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனிடையே நேற்றுமுன் தினம் கொச்சியிலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 32 பக்க ஆவணத்தில் கூறியிருப்பதாவது:

முதல்வர் அலுவலகத்திலும், முதல்வர் பினராயி விஜயனிடமும் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் ஸ்வப்னா சுரேஷ். எனவேதான், தூதரக பார்சலைப் பெறுவதற்கு ஐஏஎஸ் அதிகாரி எம். சிவசங்கர் வீட்டுக்கு ஸ்வப்னா சுரேஷ் சென்றுள்ளார்.

ஸ்வப்னா சுரேஷை முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றாகத் தெரியும். முதல்வரிடமிருந்து பல்வேறு யோசனைகளைப் பெற்றுள்ளார் ஸ்வப்னா. அதைப் போலவே ஸ்வப்னாவுக்கும் முதல்வர் உதவியுள்ளார்.

முதல்வர் அலுவலகத்தைப் போலவே ஐக்கிய அரபு அமீரக அலுவலகத்திலும் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார். தூதரக பார்சலை விடுவிக்குமாறு சுங்கத்துறை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தூதரகத்துக்கு அவர் மெயில் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் முதன்மை செயலர் சிவசங்கர் வீட்டுக்குச் சென்று அவரது உதவியை நாடியுள்ளார்.

அதைப் போலவே வெளிநாடுகளிலும் அவருக்கு அதிக தொடர்பு இருந்துள்ளது. அரபிகளிடமிருந்து அவர் ஒவ்வொரு பார்சலுக்கும் 1,000 அமெரிக்க டாலர்களை கமிஷனாகப் பெற்றுள்ளார். இந்த சதியில் முக்கிய நபராக ஸ்வப்னா உள்ளார். அதாவது இந்த சதியின் ஆல்-இன்-ஆல்-ஆக அவர் இருந்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x