

கடந்த 2012-ம் ஆண்டு இந்திய கடற்பகுதியில் கேரள மீனவர்கள் 2 பேரை இத்தாலி சரக்கு கப்பலில் இருந்த அந்நாட்டின் 2 கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, ‘‘மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று இத்தாலி அரசு கடிதம் எழுதியுள்ளது. எனவே, இந்த வழக்கை முடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கூறும்போது, ‘‘மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதலில் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அதற்கான காசோலையை முதலில் கொண்டுவாருங்கள். அப்போதுதான் வழக்கை முடிக்க முடியும்.
மேலும், வழக்கை திரும்பப் பெறுவதை அனுமதிப்பது தொடர்பாக இறந்த மீனவர்களின் உறவினர்களது கருத்தையும் கேட்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என்றார்.