Last Updated : 07 Aug, 2020 07:23 PM

 

Published : 07 Aug 2020 07:23 PM
Last Updated : 07 Aug 2020 07:23 PM

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் ஆளுநராக அமர்த்தப்பட்ட உ.பி.யின் 10 அரசியல்வாதிகள்

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா

புதுடெல்லி

பாஜக தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தது முதல் உ.பி.யின் 10 அரசியல்வாதிகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா பத்தாவது நபராக ஆளுநராகி உள்ளார்.

இந்தியாவின் இதயம் எனப்படும் மாநிலம் உத்திரப்பிரதேசம். இங்கு அமையும் ஆட்சியை பொறுத்து மத்தியில் அரசு அமைவது வழக்கம் எனக் கருதப்படுவது உண்டு.

மத்தியில் எந்த அரசியல் கட்சிகளின் ஆட்சி அமைந்தாலும் அதன் அமைச்சரவையில், உபியை சேர்ந்தவர்கள் அதிகம் இடம் பெறுவதும் வழக்கமாக உள்ளது. இதுவரை இருந்த இந்தியப் பிரதமர்களின் பட்டியலில் உபியை சேர்ந்தவர்களே அதிகம்.

இந்நிலையில் நாட்டின் அனைத்து மாநிலங்களில் ஆளுநராக இருப்பவர்களில் உ.பி.யை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இவர்களில் 10 அரசியல்வாதிகள் கடந்த ஆறு ஆண்டுகளில் பாஜக தலைமையிலான ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் பிரதமராக அமர்ந்தார் நரேந்திர மோடி. அவர் நாட்டின் நிர்வாகப் பொறுப்பில் தலைமை ஏற்றது முதல் பல்வேறு அரசியல்வாதிகள் ஆளுநராக அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேர் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்களாக இடம் பெற்றுள்ளனர். இதில், இருதினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக அமர்த்தப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சரான மனோஜ் சின்ஹா.

இதற்கு முன் ஆகஸ்ட் 2018 இல் ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக அமர்த்தப்பட்ட சத்யபால் மல்லீக்கும் உ.பி.யை சேர்ந்தவரே. ஜனதா தளம் கட்சியில் இருந்து சமாஜ்வாதிக்கு சென்ற 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தவர்.

சத்யபால் மல்லீக் தற்போது கோவாவின் ஆளுநராக இருந்து வருகிறார். பிரதமர் மோடி ஆட்சியில் அமர்த்தப்பட்ட முதல் உ.பி. அரசியல்வாதி கேசரிநாத் திரிபாதி. உ.பி. சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரான இவர் 2014 இல் மேற்கு வங்க மாநில ஆளுநராக்கப்பட்டார்.

உ.பி.யின் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான கல்யாண்சிங்கும் ராஜஸ்தானின் ஆளுநராக்கப்பட்டிருந்தார். கேசரிநாத்தும், கல்யாண்சிங்கும் கடந்த வருடம் ஓய்வு பெற்றனர்.

கல்யாண் சிங்

உ.பி.யில் பலமுறை மாநில அமைச்சராக இருந்த பாகு சவுகான், பிஹார் ஆளுநராக அமர்த்தப்பட்டுள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான லால்ஜி டண்டண், மத்தியப்பிரதேசத்தின் ஆளுநராக இருந்தார்.

இவர் சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் காலாமானார். பாஜக ஆதரவாளராகக் கருதப்படும் உ.பி.யின் பதோஹியை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான பிரிகேடியர் பி.டி.மிஸ்ரா, அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக உள்ளார்..

இந்த 10 ஆளுநர்கள் பட்டியலில் ஒரே ஒரு முஸ்லிமாக இடம்பெற்றுள்ள ஆரிப் முகம்மது கான் கேரளாவின் ஆளுநராக அமர்த்தப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சரான இவர் காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு சென்றவர்

ஆரிப் முகமது கான்

உத்தராகண்டின் ஆளுநராக இருக்கும் பேபி ராணி மவுர்யா, கடந்த 1995 ஆம் ஆண்டில் ஆக்ராவின் முதல் பெண் மேயராக இருந்தவர். பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கல்ராஜ் மிஸ்ரா உ.பி.யின் பிராமணர் சமூக தலைவராகக் கருதப்படுபவர்.

கல்ராஜ் மிஸ்ரா

2019 இல் இமாச்சலப்பிரதேச ஆளுநராக அமர்த்தப்பட்ட கல்ராஜ் மிஸ்ரா தற்போது ராஜஸ்தானுக்கு மாற்றலாகி, அப்பதவியில் நீடிக்கிறார். இந்த பட்டியல் வரும் நாட்களில் மேலும் தொடரும் வாய்ப்புகளும் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x