Published : 07 Aug 2020 06:18 PM
Last Updated : 07 Aug 2020 06:18 PM

ஜம்மு காஷ்மீரில் 4 ஜி இணைய சேவை; மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆக.11-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்கக் கோரிய வழக்கில் அளித்த தீர்ப்பில் தெரிவித்தபடி, உயர்நிலைக் குழுவை அமைக்காததற்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

ஜம்மு காஷ்மீரில் மருத்துவச் சேவைக்காகவும், கல்விக்காகவும் 4 ஜி இணைய சேவை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க உயர்நிலைக் குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தவில்லை எனக்கூறி ‘ஃபவுண்டேஷன் ஃபார் மீடியா ப்ரபஷனல்' அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹசீபா அகமதி, ''இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு தரப்பு கால அவகாசம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இது வழக்கை இழுத்தடிக்கும் செயல்'' எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், ''இந்த விவகாரம் தொடர்பாக சில காலம் காத்திருந்தீர்கள். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன சொல்ல இருக்கிறது என்பதைக் கேட்க இரு நாட்கள் பொறுத்திருங்கள். அதன் பின்னர், இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு உள்ளதா? என்பதைப் பார்க்கலாம்'' எனத் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் முதல் விசாரணையை ஒத்திவைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

அதேபோல, ஜம்மு-காஷ்மீரில் எந்தப் பகுதிகளில் 4ஜி சேவையை அளிக்க முடியும்? என நீதிபதிகள் வினவினர். இது தொடர்பாக மத்திய அரசிடம் உரிய பதிலைப் பெற்று விளக்கம் அளிப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x