Published : 07 Aug 2020 11:47 AM
Last Updated : 07 Aug 2020 11:47 AM

மூணாறு ராஜமாலா அருகே மிகப்பெரிய நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு; 70க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

கோப்புப்படம்

மூணாறு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமாலா அருகே நேற்று இரவு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு அதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்போர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டப் பணிக்குச் சென்றவர்கள் என்றும், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த இரு நாட்களாக கொட்டித் தீர்த்துவருகிறது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே கனமழை விடாது பெய்து வருகிறது.

இந்நிலையில் மூணாறு கிராமப் பஞ்சாயத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் ராஜமாலா வார்டு இருக்கிறது. இங்குள்ள நேமக்கடாவில் உள்ள பெட்டிமடா பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.

மூணாறு பகுதியில் நேற்று முன்தினத்திலிருந்து பெய்துவரும் கனமழையால், தனியார் எஸ்டேட் அமைந்திருக்கும் நேமக்கடா பகுதியில் இன்று அதிகாலை திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இன்னும் அப்பகுதியில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவருவதாலும், மழைநீர் தேங்கி இருப்பதாலும் மீட்புப் பணிகளைத் தொடர்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. தொடர்மழையால் பெரியவாரை பகுதியில் பகுதியில் இருந்த ஆற்றுப்பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது.

இருப்பினும் அங்கு சென்ற தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர், வனத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், 70-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் மழையும், காற்றும், காட்டாற்று வெள்ளமும் செல்வதால் அங்கு செல்வதில் மீட்புப் படையினர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x