Published : 06 Aug 2020 08:20 AM
Last Updated : 06 Aug 2020 08:20 AM

புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது: மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதன் மூலம் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள் துறை அமைச்சர் கரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாளாகும். அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி உள்ளார். இதன் மூலம் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. நம் நாட்டின் கலாச்சார வரலாற்றில் இந்த தருணம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையின் காரணமாகவே, அயோத்தியில் ராமர் கோயில் அமைவது சாத்தியமாகி இருக்கிறது. எந்தவொரு சூழலிலும் இந்தியாவின் கலாச்சாரத்தையும், அதன் மாண்புகளையும் பாதுகாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் அமைவது என்பது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவாக இருந்தது. அந்தக் கனவும், அவர்களின் நம்பிக்கையும் இன்று நனவாகியுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x