Published : 05 Aug 2020 09:17 PM
Last Updated : 05 Aug 2020 09:17 PM

ராமர் கோயில் கட்ட விரும்பியவர் ராஜீவ் காந்தி; பிறர் ஆதாயம் தேட பார்க்கிறார்கள்: பூமி பூஜை குறித்து கமல்நாத் சாடல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று ராஜீவ் காந்தி கூறினார், ஆனால் இன்றோ வேறு சிலர் தாங்கள் செய்ததாக கூறி ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என ம.பி.முன்னாள் முதல்வர் கமல்நாத் கூறினார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதன்படி இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

வேத மந்திரங்களை முழங்கி, பூஜை பூஜையைத் தொடங்கினர். பூமி பூஜை முடிந்தபின் ராமர் கோயிலுக்காக 40 கிலோ எடையுள்ள முதல் வெள்ளி செங்கல்லை பிரதமர் மோடி தொட்டு வைத்து அடிக்கல் நாட்டினார்.

விழாவில் உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ம.பி.முன்னாள் முதல்வருமான கமல்நாத் இன்று தனது வீட்டில் ராமர் பூஜை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘நமது நாட்டிற்கு இன்று வரலாற்று சிறப்பு மிக்க தினம். ஒவ்வொரு இந்தியரும் விரும்பிய ராமர் கோயில் கட்டுமானப் பணி இன்று தொடங்கியுள்ளது. 1985-ம் ஆண்டு காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி தான் முதன் முதலில் பூட்டை திறந்து விட்டார். அங்கு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும், ராம ராஜ்யம் அமைக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் இன்றோ வேறு சிலர் தாங்கள் செய்ததாக கூறி பெருமை தேட பார்க்கிறார்கள்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x