Last Updated : 05 Aug, 2020 02:00 PM

 

Published : 05 Aug 2020 02:00 PM
Last Updated : 05 Aug 2020 02:00 PM

அயோத்தியில் பூமி பூஜை முடிந்தது: வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்த பிரதமர் மோடி: படம் | ஏஎன்ஐ.

அயோத்தி

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, கோயில் கட்டுவதற்காக முதல் வெள்ளி செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதன்படி இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசம் தலைநகர் லக்னோ நகரத்துக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார்.

அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி நகரம் சென்றார். அங்கு அவரை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர். ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி அயோத்தி நகருக்குச் சென்றடைந்தார்.

அயோத்தியில் உள்ள பழமையான அனுமன் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு செய்தார். கடவுள் அனுமனுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டார்.

அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு, கடவுள் ஸ்ரீ ராமர் குழந்தை உருவ கோயிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபட்டார். அங்கு, இரவு நேரத்தில் மணத்துடன் மலரும் பாரிஜாத மல்லிச் செடியை பிரதமர் மோடி நட்டு வைத்தார்.

அங்கிருந்து ராமர் கோயில் பூமி பூஜை நடக்கும் இடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். பூமி பூஜை நடக்கும் இடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், அறக்கட்டளைத் தலைவர் நிர்தயா கோபால் தாஸ் மகராஜ், தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற விஐபிக்கள், சாதுக்கள், பீடாதிபதிகள் என நூற்றுக்கணக்கோர் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, மோகன் பாகவத், ஆதித்யநாத், ஆனந்திபென் படேல் ஆகியோரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுடன் பூஜையில் பங்கேற்றனர்.

தீட்சிதர்கள் வேத மந்திரங்களை முழங்கி, பூஜை பூஜையைத் தொடங்கினர். பூஜையில் பிரதமர் பக்தியுடன், மந்திரங்களை உச்சரித்தார். பூமி பூஜை முடிந்தபின் ராமர் கோயிலுக்காக 40 கிலோ எடையுள்ள முதல் வெள்ளி செங்கல்லை பிரதமர் மோடி தொட்டு வைத்து அடிக்கல் நாட்டினார்.

ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின், அங்கிருந்தவர்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவ், பாரத் மாதாகி ஜே என்ற கோஷங்களை எழுப்பினர்.

கடந்த 1989-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் ராம பக்தர்கள் அனுப்பிய 2.75 லட்சம் செங்கற்களில் இருந்து ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட 100 கற்கள் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டன.
கடந்த 1980களில் இந்து மதத் தலைவர்கள், அமைப்புகள் மூலம் தொடங்கப்பட்ட ராமஜென்மபூமி இயக்கம் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின் கோயிலில் முடிந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் விழாவையொட்டி நகரில் பல்வேறு இடங்களில் பஜனைகளும், ஆராதனைகளும் நடந்தன. ராமர் கோயில் பூமி பூஜையையொட்டி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அலங்காரத் தோரணங்களும், வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x