Published : 04 Aug 2020 08:15 PM
Last Updated : 04 Aug 2020 08:15 PM

ராமர் கோயில் கட்டுவதற்காக  இதுவரை வந்துள்ள பணம் எவ்வளவு?- தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தகவல் 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள பணம் குறித்த விவரங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நாளை பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

கரோனா தொற்று சூழல் காரணமாக நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்க உள்ளனர். இருப்பினும் விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் பூமி பூஜை விழா மேடையில் 4 மொத்தம் இடம் பெறுவர். பிரதமர் நரேந்தி மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம் பெறுவர். மொத்தம் 175 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் வசிப்பவர்கள்.

வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி, கேட்பாரற்ற 10 ஆயிரம் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தியவரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான முகமது ஷெரீப் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்றோர் கரோனா தொற்று பிரச்சினை காரணமாக நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்கவில்லை.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள பணம் குறித்த விவரங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 4-ம் தேதி வரை மொத்தம் 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. பூமி பூஜை நடைபெறும் நாளான நாளை 11 கோடி ரூபாய் வரும் என எதிர்பார்க்கிறோம். இது தவிர வெளிநாடுகளில் இருந்து 7 கோடி ரூபாய் பணம் வரவுள்ளது. ஆனால் அதனை நிறுத்தி வைத்துள்ளோம். அந்த பணத்தை பெறவில்லை. எங்கள் அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கான அனுமதியை முழுமையாக பெறவில்லை. அனுமதி பெறப்பட்டவுடன் அந்த பணத்தை பெற்றுக் கொள்வோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x