Published : 04 Aug 2020 03:18 PM
Last Updated : 04 Aug 2020 03:18 PM

நாளை வரலாற்று தினம்; ராமர் கோயில் பூமி பூஜைக்கு 11 வெள்ளி செங்கல்கள் அனுப்பப்படும்: கமல்நாத் தகவல் 

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸார் திரட்டிய நன்கொடை மூலம் 11 வெள்ளி செங்கல்கள் உருவாக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

ஆகஸ்ட் 5ம் தேதியான நாளை பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார். ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸும் வரவேற்றுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் வரவேற்று இருந்தார்.

ராமர்கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது வீட்டில் இன்று அனுமன் சாலிசா பாராயண நிகழ்ச்சி நடத்தினார். ராமர் படம் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்திப்பட்டது. பின்னர் வேத விற்பன்னர்கள் இணைந்து அனுமன் சாலிசா பாராயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கமல்நாத் பக்தியுடன் வழிபாடு நடத்தினார்.

பின்னர் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் கூறியதாவது:

‘‘அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறுகிறது நாளை வரலாற்று சிறப்பு மிக்க தினம். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸார் திரட்டிய நன்கொடை மூலம் 11 வெள்ளி செங்கல்கள் உருவாக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை முன்னிட்டு அனுமன் சாலிசா பாராயணம் செய்தோம். மத்திய பிரதேச மாநில மக்களின் நலனுக்காக அனுமன் சாலிசா பாராயணம் செய்யப்பட்டது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x