Published : 04 Aug 2020 02:50 PM
Last Updated : 04 Aug 2020 02:50 PM

நாளை ராமர்கோயில் பூமி பூஜை விழா: கமல்நாத் வீட்டில் அனுமன் சாலிசா பாராயணம்

ராமர்கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது வீட்டில் இன்று அனுமன் சாலிசா பாராயண நிகழ்ச்சி நடத்தினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸும் வரவேற்றுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பதிவு செய்துள்ள வீடியோ செய்தியில் கூறுகையில் ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வரவேற்கிறேன். நாட்டு மக்களின் நீண்ட நாளைய விருப்பம் அது. அயோத்தியில் இந்தியர்கள் அனைவரின் ஒப்புதலுடனேயே ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்தியாவில் மட்டும் தான் இது சாத்தியமாகும். இந்தியர் ஒவ்வொருவரின் நம்பிக்கையின் மையப்புள்ளியாக ராமர் கருதப்படுகிறார்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் ராமர்கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது வீட்டில் இன்று அனுமன் சாலிசா பாராயண நிகழ்ச்சி நடத்தினார். ராமர் படம் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்திப்பட்டது. பின்னர் வேத விற்பன்னர்கள் இணைந்து அனுமன் சாலிசா பாராயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கமல்நாத் பக்தியுடன் வழிபாடு நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x