ராமர் கோயில் பூமி பூஜை விழா: பிரதமர் மோடியுடன் பங்கேற்பவர்கள் யார் யார்?

ராமர் கோயில் பூமி பூஜை விழா: பிரதமர் மோடியுடன் பங்கேற்பவர்கள் யார் யார்?
Updated on
1 min read

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்பவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

இதையடுத்து விழா ஏற்பாடுகள் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் இரண்டாவது முறையாக மீண்டும் அவர் அயோத்தி சென்றுள்ளார்.

ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பாகவும், கட்டுமானப் பணிகள் குறித்தும் அவர் இன்று ஆலோசனை நடத்தினார்.

அயோத்தி அறக்கட்டளை நிர்வாகிகள், பல்வேறு மடாதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
கரோனா தொற்று சூழல் காரணமாக நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்க உள்ளனர். இருப்பினும் விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்படாமல் சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாகவும் விவாதித்தார்.

இதுகுறித்து தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

‘‘ராமர் கோயில் பூமி பூஜை விழா மேடையில் 4 மொத்தம் இடம் பெறுவர். பிரதமர் நரேந்தி மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம் பெறுவர். மொத்தம் 175 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியில் வசிப்பவர்கள் தான்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி, கேட்பாரற்ற 10 ஆயிரம் உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தியவரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான முகமது ஷெரீப் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்றோர் கரோனா தொற்று பிரச்சினை காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in