Last Updated : 03 Aug, 2020 11:15 AM

 

Published : 03 Aug 2020 11:15 AM
Last Updated : 03 Aug 2020 11:15 AM

குணமடைந்தோர் 12 லட்சத்தை நெருங்குகின்றனர்: இந்தியாவில் 18 லட்சத்தைக் கடந்தது நோய்த்தொற்று; உயிரிழப்பு 38 ஆயிரத்துக்கு மேல் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் புதிதாக 52 ஆயிரத்து 972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கரோனா தொற்று எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் புதிதாக 52 ஆயிரத்து 972 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த நோய்த்தொற்று எண்ணிக்கை 18 லட்சத்து 3 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 5-வது நாளாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனாவால் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமைதான் 17 லட்சம் வந்த நிலையில் இன்று 18 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40 ஆயிரத்து 574 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து, மீண்டோர் சதவீதம் 65.44 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 79 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 771 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3 லட்சத்து 81 ஆயிரத்து 27 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று ஐசிஎம்ஆர் தெரிவிக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 260 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 843 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 98 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 10 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,004 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14 ஆயிரத்து 572 பேர் சிகிச்சையில் உள்ளனர். 22 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,486 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 74,598 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 84 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 11,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x